''தமிழ்நாட்டில் குடிசைகளே இருக்கக்கூடாது என்பதற்கு மாற்றாக கான்கிரீட் வீடுகளை கட்டித்தரும் ஒரு அற்புதமான திட்டம்தான் கலைஞர் வீடு வழங்கும் திட்டம். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகளை கட்டி முடிக்கவேண்டும் என்று அறிவித்து, முதல் ஆண்டு 3 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றும் தெரிவித்தோம். முதல் கட்டமாக இந்த 3 லட்சம் வீடுகளும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் திறந்துவைக்கப்பட இருக்கிறது'' என்று சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார்.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முதல் வீட்டை கடந்த 10ஆம் தேதி கடலூரில் பயனாளி ஒருவருக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்த கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தால் பொதுமக்களுக்கு என்ன பயன் என்பதுதான் கேள்வி.
இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட தமிழக அரசு சார்பில் 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். எப்படி அந்தப் பணம் வழங்கப்படுகிறது என்றால், முதலில் வீட்டிற்கு அஸ்திவாரம் போட 6 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. எப்போது என்றால், முன்பணம் 6 ஆயிரம் ரூபாய் போட்டு அஸ்திவாரம் போட வேண்டுமாம். பின்னர் அதற்குரிய பில்லை காட்டி 6 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதைத் தொடர்ந்து 56 கிலோ கம்பி, 56 கிலோ சிமெண்ட் மூட்டை வாங்க அரசு அனுமதி அளிக்கிறது. இதனை அனைத்தையும் வாங்கி வீடு கட்டும் அந்த பயனாளி, பில் காட்டி அதற்குண்டான பணத்தை பெற்றுக் கொள்கிறார். இதையடுத்து ஜன்னல், கதவு வாங்க 12 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. அதுவும் முன்பணம் போட்டு கதவு, ஜன்னல் வைத்து பில் காட்டியபிறகே 12 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது.
இப்படி முன்பணம் போட்டு வீடு கட்டும் அளவில் ஏழை மக்கள் இல்லை. இப்படி முன்பணம் போட்டு வீடு கட்டும் நிலை இருந்தால் ஏன் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் வீடு கட்ட நினைப்பார்கள்.
நடந்த நிகழ்வு ஒன்றை நம் வாசகர்களுக்கு சொல்ல விரும்புகிறாம். தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டிணம் மண்டலத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 190 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்தனை நாள் குடிசையில் வாழ்ந்த நமக்கு இப்போதுதாவது விடிவுகாலம் பிறந்ததே...?! என்று சந்தோஷகத்தில் திளைத்த மக்கள், அதிகாரிகள் சொன்ன பதிலால் திகைத்துப் போனார்கள்.
முன்பணம் போட்டு நீங்கள்தான் வீடு கட்ட வேண்டும், அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் பில் கொடுத்து நீங்கள் செலவழித்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான். 190 வீடுகள் கட்டப்படும் என்று இருந்த நிலையில் தற்போது 9 வீடுகளே கட்டப்பட்டு வருகிறது. மற்றவர்கள் நாங்கள் இந்த குடிசை வீட்டிலேயே இருந்து விடுகிறோம். எங்களால் முன்பணம் போட்டு வீடு கட்டமுடியாது என்று கூறிவிட்டு மறுத்துவிட்டனர்.
தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் மட்டும் அல்ல தேர்தல் நேரத்தில் சொல்லாத அறிவிப்புகளையும் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம் என்று பெருமையடித்துக் கொள்ளும் தமிழக அரசு, இலவச வீடு திட்டம் என்ற பெயரில் இப்படி வதைக்கலாமா ஏழைகளை?!
No comments:
Post a Comment